Sunday, 12 May 2019

குளியல் முறை

குளியல் முறை
உடல் சுத்தம் வேண்டி ஒவ்வொருவரும் செய்யும் விஷயம், நீராடல். ஒருவர் எப்படி நீராட வேண்டும் என்பது பற்றி அகத்தியர் சில விஷயங்களை தெரியப்படுத்திருக்கிறார். அதுபற்றி பார்க்கலாம்.

* குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். ஏனெனில் இவை இரண்டும் உத்தம திசைகள். கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம். மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல் வலி வந்து சேரும்.

* ஒவ்வொருவரும் தினமும் கங்கா ஸ்நானம் செய்ய முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். தினமும் குளிப்பதற்கு முன்பாக முன் ஒரு குவளை தண்ணீரில் மோதிரவிரலால் ‘ஓம்’ என்று தியானம் செய்து எழுதுங்கள். அந்த நீர் அப்போது முதல் கங்கை நீராக மாறிவிடும். ஒரு நிமிட தியானத்தில் ‘இந்த உடலுக்குள் நீங்களே வந்திருந்து, இதை உங்களுக்கு செய்யும் அபிஷேகமாக ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று இறைவனை வேண்டிக்கொள்ள வேண்டும்.

* அக்னி எப்போதும் மேல்நோக்கியே பயணிக்கும். உடலுக்குள் இருக்கும் அக்னி கீழிருந்து மேல் ஏறுவதுதான் சரி. எனவே தண்ணீரை கால் முதல் மேல் நோக்கி நனைத்து வந்து, கடைசியில் தலையில் ஊற்றிக் கொள்ளவேண்டும். நமது மண்டை ஓடுக்கு எப்படிப்பட்ட அக்னியின் வேகத்தையும் தாங்குகின்ற சக்தி உண்டு. காலில் இருந்து பரவும் குளிர்ச்சி, மேல் நோக்கி பயணிக்கும் போது உள் அக்னியானது தலையை நோக்கி பயணிக்கும். அதுவே சரியான முறை.

* தலை முதல் கால் வரை உள்ள பின் பாகத்தை ‘பிரஷ்டம்’ என்பார்கள். அதில் நம் முதுகு பாகம் தான் மிகப்பெரியது. அங்கு தான் அக்னியின் வேகம் கூடுதலாக பரவும். ஆதலால், குளித்து முடித்தவுடன், முதலில் முதுகு பாகத்தைத் தான் துடைக்க வேண்டும்.

* குளித்து முடித்ததும் உடலை சுத்தம் செய்ய, நம்மில் பலரும் ஈரம் படாத துண்டைத் தான் உபயோகிப்பார்கள். ஆனால் அது சரியல்ல... குளிக்கும் நீரிலேயே துண்டை நனைத்துப் பிழிந்து துவட்டுவதுதான் உத்தமம். உலர்ந்த துணியானது, உள் சூட்டை வேகமாகப் பரவச் செய்து, பலவித உள் வலிகளை ஏற்படுத்தும்.

* பிறருடன் வாய்திறந்து பேசக்கூடாத மூன்று நேரங்களில் ஒன்று, குளியல் நேரம். அந்த நேரத்தில் மவுனத்தை கடைப் பிடிக்க வேண்டும். அல்லது மனதளவில் இறைவனின் ஜெபத்தை உச்சரிக்கலாம்.

* பஞ்ச இந்திரியங்களால் செய்த தவறுகளினால், நமக்குள் சேர்த்து வைத்துள்ள கர்மாக்கள், குளிப்பதன் மூலமாக களையப்படுகிறது.

* குளிக்கும் போது, வாயில் கொள்ளளவு நீரை வைத்து குளித்தபின் துப்புவதால், கழுத்துக்கு மேல் வருகிற நீர் சம்பந்தமான கட்டுகளை, நோய்களை தவிர்க்கலாம். வாயில் இருக்கும் நீர் மேல் நோக்கி எழும்பும் அக்னியின் வேகத்தை கட்டுப்படுத்தும்.

* குளம், ஆறு, கடல் போன்ற நீர்நிலைகளில் எல்லா தேவதைகளும், பெரியவர்களும் அரூபமாக ஸ்நானம் செய்வதாக கூறுகிறார்கள். ‘நாரம்’ என்கிற தண்ணீரில் நாராயணன் வாசம் செய்வதாகவும் சொல்வார்கள். ஆதலால் ஓடிச் சென்று அதில் குதிக்காமல், கரையில் நின்று, சிறிது நீரை எடுத்து தலையில் தெளித்தபின், நீர் கலங்காமல், ஒரு இலை நீரில் விழுகிற வேகத்தில் மெதுவாக இறங்கி சென்று குளிக்கவேண்டும்.

* நீரில் காரி உமிழ்வதோ, துப்புவதோக் கூடாது. நீரின்றி ஒரு உயிரும் இல்லை. நீரை விரயம் செய்வதால், கடன் அதிகரிக்கும். உப்பு நீர் ஸ்நானம் திருஷ்டி தோஷங்களை அறுக்கும்.

1 comment:

  1. Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let keep on sharing your stuffs.
    Tamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News

    ReplyDelete

கேரளாவின் சிறந்த கடற்கரைகள்

கேரளாவின் சிறந்த கடற்கரைகள்!  🏖️ கடவுளின் சொந்த நாடான கேரளா, இந்தியாவிலேயே மிகவும் மூச்சடைக்கக்கூடிய சில கடற்கரைகளைக் கொண்டுள்ளது.  கேரளாவி...